தமிழக வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்

பெங்களூருவில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தமிழக வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்
Published on

பெங்களூரு,

பெங்களூரு பீனியா அருகே வசித்து வந்தவர் கிரண்குமார் என்ற கிரண் (வயது 26). இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். கடந்த பல ஆண்டுகளாக பெங்களூருவில் தங்கி இருந்து ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்தார். கடந்த 14-ந் தேதி பீனியா அருகே சிவபுரா ஏரிப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் மர்மநபர் களால் கிரண்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில், கிரண்குமாரின் தலையில் கல்லைப்போட்டு மர்மநபர்கள் கொலை செய்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க பீனியா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கிரண்குமாரை ரவுடி சந்தீப்குமார் என்ற சந்தீப் தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அதே நேரத்தில் சந்தீப்குமார் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலையில் பீனியா அருகே கானிகரஹள்ளி பகுதியில் ரவுடி சந்தீப்குமார் பதுங்கி இருப்பது பற்றி இன்ஸ்பெக்டர் சீனிவாசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், போலீஸ்காரர்களுடன் அங்கு விரைந்து சென்றார். போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீஸ்காரர்கள் முயன்றனர். உடனே தன்னிடம் இருந்த ஆயுதத்தால் போலீஸ்காரர்களை ரவுடி சந்தீப்குமார் தாக்கினார். இதில், 2 போலீஸ்காரர்களின் கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சீனிவாஸ், துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு சரண் அடைந்துவிடும்படி ரவுடி சந்தீப்குமாரை எச்சரித்தார். ஆனாலும் சரணடைய மறுத்த அவர், அங்கிருந்த போலீஸ்காரர்களை மீண்டும் தாக்க முயன்றதுடன், தப்பி ஓடவும் முயற்சித்தார்.

உடனே இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் ரவுடி சந்தீப்குமாரை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 2 முறை சுட்டார். இதில், சந்தீப்குமாரின் காலில் 2 குண்டுகள் துளைத்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் சந்தீப்குமாரை பிடித்து போலீசார் கைது செய்தனர். உடனடியாக சந்தீப்குமார் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல, சந்தீப்குமார் தாக்கியதில் காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தீப்குமாரின் பெயர் பீனியா போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கிரண்குமாருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரது தலையில் கல்லைப்போட்டு சந்தீப்குமார் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com