காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும் என்று, தஞ்சையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
Published on

தஞ்சாவூர்,

கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி அறிவித்தது குறித்து விவாதம் நடக்கிறது. நேற்றுமுன்தினம் காலை 11.07 மணிக்கு ஆங்கில சேனலில் கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ந் தேதி நடைபெறும் என ஒளிபரப்பானது. 11.08 மணிக்கு பா.ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டரில் கர்நாடகாவில் மே 12-ந் தேதி தேர்தல் என பதிவு செய்து இருந்தார். தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பே பா.ஜனதா முதலில் தேர்தல் தேதியை அறிவித்தது வியப்பாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும் தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் தேதியை தெரிவித்து இருக்கிறார். அந்த தகவல் எப்படி வந்தது. இருப்பினும் அரசியல் நாகரிகம் கருதி தேர்தல் தேதியை பதிவு செய்தது தவறு தான் என தேர்தல் தலைமை ஆணையாளரை பா.ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். மாற்று அரசியலை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். தமிழகத்தில் நிறைய வளர்ச்சி திட்டங்களை மத்தியஅரசு செயல்படுத்தி வருகிறது.

நேர்மையான ஆட்சி

மத்தியிலும் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகத்திலும் நேர்மையான ஆட்சியை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். கர்நாடக சட்டசபை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். தேர்தல் பணியில் ஈடுபட நானும், தமிழக பா.ஜனதா நிர்வாகிகளும் கர்நாடகத்துக்கு செல்ல இருக்கிறோம். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தனிக்கொடி, தனிமொழி, தனிமதம் என செயல்பட்டு வருகிறார். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும். பிரதமராக மோடி பொறுப்பு ஏற்றபின் அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மாநிலஅரசுக்கு தேவையான உதவிகளை மத்தியஅரசு செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார்.

உதான் திட்டம், பசுமை திட்டம், ரூ.10 ஆயிரம் கோடியில் சாலை பணி, ரூ.25 ஆயிரம் கோடியில் துறைமுக திட்டம் என பல்வேறு திட்டங்களை மத்தியஅரசு செயல்படுத்தி வருகிறது. தஞ்சை மருத்துவகல்லூரிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட மாநிலங்களின் கட்டமைப்பை மேம்படுத்த பன்மடங்கு நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் தமிழகத்தை போராட்ட களமாக எப்போதும் வைத்து இருக்க வேண்டும் என்று சில கட்சியினர், மக்களை போராட்டத்துக்கு தூண்டி விடுகின்றனர்.

ஓ.என்.ஜி.சி. பணி

ஓ.என்.ஜி.சி. பணி இப்போது தொடங்கப்பட்டது கிடையாது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தவறு செய்தால் மத்தியஅரசு கண்டிப்பாக கேள்வி கேட்கும். மக்களுக்கு எதிரான திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று மத்தியஅரசு உறுதி அளித்து இருக்கிறது. ஆனால் மத்தியஅரசுக்கு பலன் அளிக்கக்கூடிய திட்டத்தை கூட நிறைவேற்றக்கூடாதுஎன்றால் எப்படி? நியூட்ரினோ திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என மறைந்த அப்துல்கலாமே தெரிவித்து இருக்கிறார். இந்த திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று கூறி தான் மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்து இருக்கிறது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும் என்று மத்தியமந்திரிகள் உறுதி அளித்து உள்ளனர். அதன்படி தமிழகத்தின் உரிமை கண்டிப்பாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் இளங்கோ, மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com