தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது யார்? என கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மேலவீதியில் பங்காரு காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காஞ்சி மடத்துக்கு சொந்தமான இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவில் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள், சுவர் மீது ஏறி கோவிலுக்குள் சென்றனர். அங்கு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

நேற்று காலை வழக்கம்போல் கோவில் நடையை நிர்வாகத்தினர் திறந்தனர். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராவைக்கப்பட்டுள்ளது.

அந்த கேமராவை போலீசார் பார்த்தபோது ஒருவர் கோவிலுக்குள் வந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை. இதனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் வெளியே எடுக்கப்பட்டது. இதனால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உண்டியலில் பணம் இருந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com