டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவையடுத்து மூடப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஊத்தங்கால் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால், மக்களின் பொது அமைதிகெடும் எனக்கூறி, கடந்த மே மாதம் ஊத்தங்கால் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படவில்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும், கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை தனியார் ஒருவர், தனக்கு சொந்தமான நிலம் எனக் கூறி பாதையை மூடிவிட்டார். இதனால் எங்களது குழந்தைகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவும், பொதுமக்கள் பணிக்கு செல்லவும் மிகவும் சிரமப்படுகிறோம். இந்த பாதையை தொடர்ந்து நாங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் மனு வாங்கி அனுப்பி வைத்தனர்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், கையில் தேசியக்கொடி மற்றும் பாரதியார் படத்துடன், உயிரிழந்த அவரது சகோதரியின் 3 குழந்தைகள், அவரது தந்தை ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தனது சகோதரியை தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் முத்தமிழ் செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயாரை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் அவரது குழந்தைகள் 3 பேரின் வாழ்வாதாரத்துக்கு முத்தமிழ்செல்வனிடமிருந்து உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com