ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டணியின் வட்டார தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, வட்டார செயலாளர் மணிக்குமார் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். உபரி ஆசிரியர்கள் என்று கூறி இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் ஆசிரியர்களாக நியமிக்க உள்ள முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். 2010-ம் ஆண்டுக்கு பின்பு ஆசிரியர்களாக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் கருதி தொடர்ந்து ஊதியம் வழங்கிட வேண்டும். ஜனநாயக வழியில் கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். போராட்ட காலங்களில் போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை நியாயமாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com