இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கணவர், மாமியார் கொடுமை தாங்காமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

ஊட்டி

கணவர், மாமியார் கொடுமை தாங்காமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தகராறு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கோடேரி பகுதியை சேர்ந்தவர் கவுதம் ராஜ். இவருடைய மனைவி சஞ்சனா(வயது 27). இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.

இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சனா, மஞ்சூர் அருகே முக்கிமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மேலும் தனது கணவரும், மாமியாரும் தன்னிடம் தகராறு செய்து கொடுமைப்படுத்துவதாக கூறி அழுது உள்ளார். எனினும் பெற்றேர் அவரை சமாதானம் செய்து, கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்குளிப்பு

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட சஞ்சனா, நேற்று முன்தினம் குளியல் அறைக்கு சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனால் உடல் கருகி அவர் வலியால் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார்.

வாக்குமூலம்

இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன், மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவர் கவுதம்ராஜ், மாமியார் லதா ஆகியோர் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டு சஞ்சனா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, நீதிபதியிடம் சஞ்சனா மரண வாக்குமூலம் அளித்து உள்ளார். மேலும் திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com