தென்பெண்ணையாற்றை துணை கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு: கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை

கவர்னர் கிரண்பெடி உத்தரவின்பேரில் தென்பெண்ணையாற்றை துணை கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தென்பெண்ணையாற்றை துணை கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு: கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை
Published on

பாகூர்,

பாகூர் பகுதியில் உள்ள தென்பெண்ணையாறு, வில்லியனூர் சங்கராபரணி ஆகிய ஆறுகளில் மணல் திருட்டை தடுக்க அதிகாரிகளை கொண்ட தடுப்பு தனி குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு மணல் கடத்தலை தடுத்தனர். ஆனாலும் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வந்தது. இந்த கும்பல் சுடுகாட்டையும் விட்டு வைக்காத நிலை இருந்து வந்தது.

இந்த விவகாரத்தில் மணல் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்த துணை தாசில்தார் ராமச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மணல் திருட்டால் மாயமான சுடுகாடு என்ற தலைப்பில் நேற்று தினத்தந்தி நகர்வலம் பகுதியில் கட்டுரை வெளியானது. இதை கவனித்த கவர்னர் கிரண்பெடி உடனே மாவட்ட துணை கலெக்டர் உதயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து விவரம் கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தென்பெண்ணையாற்றை பார்வையிட்டு அங்கு நடைபெற்ற மணல் திருட்டு தொடர்பாக தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து துணை கலெக்டர் உதய குமார், பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், மணல் கடத்தல் பிரிவு தாசில்தார் சந்தோஷ்குமார் மற்றும் அதிகாரி கள் கொமந்தான்மேடு தென்பெண்ணையாற்றுக்கு சென்று பார்வையிட்டனர்.

அதனைதொடர்ந்த அவர்கள் அங்குள்ள சுடுகாடு பகுதியை ஆய்வு செய்தனர். இதில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திருடப்பட்டு இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து பகல், இரவு முழுவதும் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட போலீசார், கிராம நிர்வாக அதிகாரிகள், பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு துணை கலெக்டர் உதயகுமார் உத்தரவிட்டார்.

சோரியாங்குப்பம் ஆற்றுக் கரையோரம் 5 இடங்களில் மாட்டு வண்டிகள், லாரிகள் செல்ல முடியாத அளவிற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த பள்ளங்களை மணல் கடத்தல் கொள்ளையர்கள் மூடிவிடாமல் இருக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து வில்லியனூர் மாவட்ட துணை கலெக்டர் அலுவலத்தில் மணல் திருட்டை தடுப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாகூர், வில்லியனூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மணல் திருட்டை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து கவர்னர் கிரண்பெடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com