கோவில்பட்டியில் பயங்கரம்: பெண் அடித்துக் கொலை - அக்காள் மகன் கைது

கோவில்பட்டியில் பெண்ணை அடித்துக் கொன்ற அக்காள் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவில்பட்டியில் பயங்கரம்: பெண் அடித்துக் கொலை - அக்காள் மகன் கைது
Published on

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற பாண்டி. ரேஷன் கடை ஊழியர். இவருடைய மனைவி மகேசுவரி. இவர்களுக்கு மணிகண்டன் (வயது 25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.

மகேசுவரி இறந்து விட்டதால் பாண்டி, மகேசுவரியின் தங்கை கோகிலா (38) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகேந்திரன் (15) என்ற மகன் உள்ளான். இவன் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியும் இறந்து விட்டார். இதனால் அவருக்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகை ரூ.2 லட்சம் வந்தது.

அந்த பணத்தை பிள்ளைகள் அனைவருக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க கோகிலா முடிவு செய்தார். ஆனால் மணிகண்டன் தனக்கு அதிக பணம் வேண்டும் என்று கோகிலாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதற்கிடையே பள்ளியில் இருந்து மகேந்திரன் சுற்றுலா சென்று விட்டான். அவன் நேற்று காலையில் வீட்டிற்கு வந்தான்.

அப்போது, வீட்டில் கோகிலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன் இதுகுறித்து அருகில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தான். அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கோகிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு கோகிலாவிடம் மீண்டும் அதிக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த மரத்தால் ஆன நாற்காலியை எடுத்து கோகிலாவை சரமாரியாக அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து வெளியூருக்கு தப்பி செல்ல இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் கட்டிட தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. கோவில்பட்டியில் பெண்ணை அக்காள் மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com