வாணியம்பாடியில் பட்டப்பகலில் பயங்கரம்: கோர்ட்டுக்கு வந்த விவசாயி வெட்டிக்கொலை

வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு வந்த விவசாயியை மர்ம கும்பல் நடுரோட்டில் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.
வாணியம்பாடியில் பட்டப்பகலில் பயங்கரம்: கோர்ட்டுக்கு வந்த விவசாயி வெட்டிக்கொலை
Published on

வாணியம்பாடி,

பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆலங்காயத்தை அடுத்த சிம்மராயன் வலசையை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் மணிமாறனுக்கும், பூங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு வாணியம்பாடி கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கிற்காக நேற்று காலை 9 மணி அளவில் மணிமாறன் தனது மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி கோர்ட்டுக்கு புறப்பட்டு சென்றா.

வழியில் வாணியம்பாடி நேதாஜி நகர் தர்கா அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர்.

பின்னர் அவர்கள் கத்தியால் மணிமாறனை சரமாரியாக வெட்டினர். மேலும் அருகில் இருந்த பாறாங்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

இதனையடுத்து போலீசார் மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிமாறனை கொலை செய்தது யார்?, சொத்து தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பட்டப்பகலில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com