பாவூர்சத்திரத்தில் பயங்கரம் தொழிலாளி அடித்துக் கொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது

பாவூர்சத்திரத்தில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரத்தில் பயங்கரம் தொழிலாளி அடித்துக் கொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது
Published on

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள முப்புலியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50), கூலி தொழிலாளி. இவருக்கு சுதாகர் (26), கதிரேசன் (24), ஜோதிராஜ் (22) ஆகிய 3 மகன்கள், ஒரு மகள். இதில் சுதாகர் தவிர மற்ற 2 மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுதாகர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 10-ந் தேதி பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் நடந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கருப்பசாமியின் மாமனார் ராஜகுருசாமி வீட்டுக்கு அனைவரும் சென்றனர்.

13-ந் தேதி மாலையில் திருவிழா முடிந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுதாகருக்கும், அவரது தம்பிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை பார்த்த கருப்பசாமி, சண்டையை நிறுத்தாவிட்டால் போலீசில் புகார் செய்யப்போவதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர் தனது தந்தை என்றும் பாராமல் அவரை அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பசாமி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கருப்பசாமி இறந்தார்.

இதற்கிடையே தந்தை இறந்த தகவல் அறிந்ததும் வீட்டில் இருந்த சுதாகர் விஷம் குடித்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுதாகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com