தாந்தோன்றிமலை: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி திரண்ட பொதுமக்கள்

தாந்தோன்றிமலை அசோக்நகரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி பொதுமக்கள் திரண்டனர்.
தாந்தோன்றிமலை: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி திரண்ட பொதுமக்கள்
Published on

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை ஜே.ஜே.நகர், நிலாநகர், இந்திரா நகர், பாலாஜி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க அசோக்நகரில் குடிநீர் வால்வு உள்ளது. அதில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் குடிநீர் வால்வு உள்ள இடத்தின் அருகே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோடி குடிநீரில் கலக்கிறது. இதனால் கழிவுநீர் கலந்த குடிநீர் கடந்த 6 மாதங்களாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி குடிநீர் வால்வு உள்ள இடத்தின் அருகே திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன், குடிநீர் வினியோக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com