

நாகர்கோவில்,
நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் மக்களுக்கு இடையூறாகவும், தொற்றுநோய்களை பரப்பும் விதத்திலும் சுற்றித்திரியும் பன்றிகள் அவ்வப்போது மதுரையை சேர்ந்த ஒப்பந்தகாரரால் பிடித்து செல்லப்படுகிறது. கடந்த மாதமும் இதேபோல் 40க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடித்து செல்லப்பட்டன. இதேபோல் தற்போதும் மக்களுக்கு இடையூறாக பன்றிகள் சுற்றித்திரிவதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில், நகர்நல அதிகாரி வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் மகாதேவன்பிள்ளை, ஜாண், சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், சுப்பையார்குளம், நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடிக்கும் பணி நடந்தது.
பன்றி பிடிக்க நகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த மதுரையை சேர்ந்தவரின், ஊழியர்கள் சுமார் 15 பேர் பன்றிகளை விரட்டி, விரட்டி வலைவிரித்து பிடித்தனர். நேற்று ஒரே நாளில் 24 பன்றிகள் பிடிக்கப்பட்டன. அவற்றில் சில பன்றிகள் 50 கிலோவுக்கு மேற்பட்டவையாக இருந்தன. பின்னர் அந்த பன்றிகளை வலைகட்டப்பட்ட மினி லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர்.