நாகர்கோவில் அருகே துணிகரம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வீட்டில் 27 பவுன் கொள்ளை

நாகர்கோவில் அருகே ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வீட்டின் கதவை உடைத்து 27 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில் அருகே துணிகரம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வீட்டில் 27 பவுன் கொள்ளை
Published on

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 59). இவர் சென்னையில் போக்குவரத்து பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கீதா(52).

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். மகனும் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் உள்ளார். பாலகிருஷ்ணன் கடந்த மாதம் 19-ந்தேதி மகளை பார்ப்பதற்காக மனைவியுடன் சென்னை சென்றார்.

27 பவுன் நகை கொள்ளை

இந்தநிலையில் மகள் வீட்டில் தங்கியிருந்த பாலகிருஷ்ணன் நேற்று காலை மனைவியுடன் வீட்டுக்கு திரும்பினார். அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, படுக்கை அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறி கிடந்தன.

மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 27 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதேபோல் பூஜை அறையில் இருந்த குத்துவிளக்குகள், ரூ.5 ஆயிரமும், வீட்டின் மாடியில் உள்ள அறையின் கதவும் உடைக்கப்பட்டு அங்கிருந்த கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளி பொருட்களும் மாயமாகி இருந்தன.

பாலகிருஷ்ணன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அனைத்து அறைகளின் கதவுகளையும் உடைத்து நகை-பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இதேபோல் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com