பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்

வேளாங்கண்ணி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
Published on

வேளாங்கண்ணி,

கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி, ஆய்மழை, பாலக்குறிச்சி, கீழையூர், இறையான்குடி, விழுந்தமாவடி, வேளாங்கண்ணி உள்பட விடுபட்ட பகுதிகளுக்கு உடனே 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கவேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். கருகும் பயிர்களை காப்பாற்ற கர்நாடக மாநிலத்தில் இருந்து உடனே தண்ணீர் திறக்க நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திருத்துறைப்பூண்டி -நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் செல்லையன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பஷீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணையன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி, கீழையூர் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பயிர்க்காப்பீட்டு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com