மனைவியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த கணவர் கைது

புளியந்தோப்பில் குழந்தைகளை காட்ட மறுத்த மனைவியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த கணவர் கைது செய்யப்பட்டார்.
மனைவியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த கணவர் கைது
Published on

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பை அடுத்த கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் நியுகாலனியை சேர்ந்தவர் மைதிலி (வயது 28). மாற்றுத்திறனாளி. இவருக்கும், புளியந்தோப்பு அம்பேத்கர் சாலையில் உள்ள பி.எஸ்.மூர்த்தி நகரை சேர்ந்த வெங்கடேசனுக்கும் 9 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். வெங்கடேசன், பந்தல் போடும் வேலை செய்து வருகிறார்.

மைதிலிக்கும், வெங்கடேசனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் மைதிலி தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

வெங்கடேசன் தனது குழந்தைகளை பார்க்க அடிக்கடி மைதிலியின் பெற்றோர் வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் தனது குழந்தைகளை பார்க்க வெங்கடேசன் சென்றார். அப்போது மைதிலிக்கும், வெங்கடேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் குழந்தைகளை காட்ட மைதிலி மறுத்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், அங்கு நிறுத்தி இருந்த மைதிலியின் இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தார். இது குறித்து புளியந்தோப்பு போலீசில் மைதிலி புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் அங்கு சென்றார். அதற்குள் வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் நேற்று ஆட்டுதொட்டி அருகே வெங்கடேசனை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com