ராட்சத அலையில் சிக்கி கடலில் படகு கவிழ்ந்தது; மீனவர் மாயம் தேடும் பணி தீவிரம்

ராட்சத அலையில் சிக்கி கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராட்சத அலையில் சிக்கி கடலில் படகு கவிழ்ந்தது; மீனவர் மாயம் தேடும் பணி தீவிரம்
Published on

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது45). இவருக்கு சொந்தமான பைபர் படகில், ராஜூ மற்றும் அதேபகுதியை சேர்ந்த சூசைமாணிக்கம் (55), செல்வராஜ் (30), வீரமணி (27) ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை செருதூர் வெள்ளையாற்றில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென அவர்களது படகு ராட்சத கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற 4 பேரும் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளனர். இதில் ராஜூ, செல்வராஜ், வீரமணி ஆகிய 3 பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆனால் சூசைமாணிக்கத்தை காணவில்லை. இதனால் கடலில் விழுந்த சூசைமாணிக்கத்தை கடல் அலை இழுத்து சென்றிருக்கலாம் என்று கருதிய மீனவர்கள் உடனே அவரை கடலில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் படகு கவிழ்ந்ததில் ராஜூவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேடும் பணி தீவிரம்

இதுகுறித்து மீனவர்கள் வேளாங்கண்ணி போலீசார் மற்றும் கீழையூர் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கடலில் விழுந்து மாயமான சூசைமாணிக்கத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாங்கண்ணியில் மூழ்கிய பைபர் படகு காமேஸ்வரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com