தற்கொலை செய்த விவசாயி உடலை 3-வது நாளாக வாங்க மறுப்பு: கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா போராட்டம்

மேட்டூர் அருகே தற்கொலை செய்த விவசாயி உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்கொலை செய்த விவசாயி உடலை 3-வது நாளாக வாங்க மறுப்பு: கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா போராட்டம்
Published on

சேலம்,

மேட்டூர் சூரப்பள்ளி அருகே உள்ள பள்ளக்கானூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற பெருமாள் (வயது 45), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவரது நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த பெருமாள் கடந்த 14-ந்தேதி விஷம் குடித்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி 17-ந் தேதி பெருமாள் உயிரிழந்தார். இதையொட்டி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்தும், அவருடைய உறவினர்கள் கடந்த 2 நாட்களாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக இறந்த பெருமாளின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது. அப்போது அவருடைய உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அப்போது அவர்கள், பாதிக்கப்பட்டவர்களிடம் இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், கலெக்டர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குமார், சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

பின்னர் பெருமாள் மனைவி அன்னக்கிளி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், என் கணவர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் சேதாரத்திற்கு சட்டரீதியான இழப்பீடும், எனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com