

ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சானமாவு கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதற்காக உத்தனப்பள்ளி, சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.
அந்த காளைகளின் தலைகளில் வண்ண பதாகைகளை கட்டி விட்டு ஓட விட்டனர். அதை பறிப்பதற்காக இளைஞர்கள் துள்ளி குதித்தபடி ஓடினார்கள்.
இதில் இளைஞர்கள் சிலர் வண்ண பதாகைகளை பறித்தனர். சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இந்த விழாவை காண்பதற்காக சானமாவு, பீர்ஜேப்பள்ளி, குடிசாதனப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு வந்திருந்தனர். இதனால் சானமாவு கிராமமே விழாக்கோலமாக காட்சி அளித்தது.