மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது: தொழிலாளர்கள் 2 பேர் பலி ஆலங்குளம் அருகே பரிதாபம்

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது: தொழிலாளர்கள் 2 பேர் பலி ஆலங்குளம் அருகே பரிதாபம்
Published on

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி முடுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 46). அதே ஊரில் உள்ள ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (40). நண்பர்களான இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்கள் ஆவர்.

தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் நேற்று நடந்த கோவில் திருவிழாவுக்கு செல்ல இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, தங்கள் குடும்பத்தினரை காரில் வரும்படி கூறிவிட்டு, முருகனும், மாரியப்பனும் ஆலங்குளத்தில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு மோட்டார்சைக்கிளில் சுந்தரபாண்டியபுரம் நோக்கி புறப்பட்டு சென்றனர்.

ஆலங்குளத்தை கடந்து அத்தியூத்து கிராமத்தின் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதனால் முருகன், மாரியப்பன் ஆகிய இருவரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் விரைந்து வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மாரியப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே மாரியப்பனும் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை சேர்ந்த பாண்டி (46) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பஸ் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com