தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்

புதுவை மறைமலை அடிகள் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். குடிபோதையில் இருந்த டிரைவர் மீது பொதுமக்கள் சரிமாரி தாக்குதல் நடத்தினர்.
தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நேற்று மாலை வெங்கடசுப்பாரெட்டியார் சிலையில் இருந்து அண்ணாசிலை நோக்கி ஒரு கார் தாறுமாறாக ஓடியது. அந்த கார் ஆட்டுப்பட்டி அருகே சென்ற போது ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த உடன் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த பொதுமக்கள் அந்த காரை வேகமாக விரட்டிச்சென்றனர்.

அந்த கார் வேகமாக சென்று அண்ணாசிலை சந்திப்பில் நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதியது. இதனால் ஆட்டோ கவிழ்ந்தது இதில் ஆட்டோ டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அந்த கார் ஆட்டோவின் முன்னால் நின்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் ரோட்டில் சாய்ந்து விழுந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த தேவி அவரது மகள் பிரதிக்ஷா (8), மகன் சதீஷ் (3) ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் பிரதிக்ஷா, சதீஷ் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இதனை கண்ட அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். அப்போது காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே பொதுமக்கள் கார் டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனை பார்த்த உடன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த ஒதியஞ்சாலை போலீசார் அங்கு விரைந்து சென்று காரை ஓட்டி வந்த டிரைவரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

பின்னர் இது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தலையில் காயம் அடைந்த சிறுமி பிரதிக்ஷா உள்பட 4 பேரும் புதுவை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த விபத்து தொடர்பாக புதுவை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த முதலியார் பேட்டையை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com