

சென்னை,
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் பியூஸ் (வயது 20). இவர் தனது நண்பர்களுடன் பெரம்பூர் ஜமாத் அருகே உள்ள மைதானத்தில் சனிக்கிழமை தோறும் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம்(சனிக்கிழமை) கிரிக்கெட் விளையாட சென்றனர். அங்கு நடந்த விளையாட்டில் வெற்றிப்பெற்றதாக கூறப்படுகிறது.
வெற்றி மகிழ்ச்சியில் நண்பர்கள் அனைவரும் 4 கார்களில் ஜெமினி மேம்பாலம் அருகே மோர் குடிக்க வந்துள்ளனர். அண்ணாசாலை வழியாக ஜெமினி மேம்பாலம் நோக்கி மிக வேகமாக அனைவரும் கார்களை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
ஜெமினி மேம்பாலம் அருகே வரும் போது பியூஸ் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்தது தறி கெட்டு ஓடியது. பின்னர் அருகில் இருந்த நடைபாதையில் மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பியூஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பியூசுடன் காரில் பயணம் செய்த அவருடைய நண்பர்கள் சுனில், பவுல், நிஷாஸ், ரங்கன் உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் பியூஸ் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.