மரத்தில் கார் மோதி 3 பேர் பலி சென்னையை சேர்ந்தவர்கள்

வாணியம்பாடி அருகே புளியமரத்தில் கார் மோதி சென்னையை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மரத்தில் கார் மோதி 3 பேர் பலி சென்னையை சேர்ந்தவர்கள்
Published on

வேலூர்,

சென்னை போரூர் முகிலிவாக்கத்தை சேர்ந்த கால் டாக்சி டிரைவர்கள் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா முடித்து விட்டு நேற்று மதியம் சென்னைக்கு திரும்பினர். காரை டிரைவர் உமாபதி (வயது 26) என்பவர் ஓட்டினார்.

கார் வாணியம்பாடி அருகே கலந்திரா பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செல்வபிரகாஷ் (26), சிவா (27), ஜானகிராமன் (25) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் சுப்பிரமணி (28), டிரைவர் உமாபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் விபத்து நடந்த போது வேலூரில் இருந்து திருப்பத்தூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் காரை நிறுத்தி, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுப்பிரமணி மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com