போரூர் சுங்கச்சாவடி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

போரூர் சுங்கச்சாவடி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
போரூர் சுங்கச்சாவடி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

பூந்தமல்லி,

திருச்சியை சேர்ந்தவர் செந்தில்வடிவு(வயது 46). இவருடைய உறவினர் திருமறைசெல்வி(49). இவர்கள் இருவரும் சென்னை கோயம்பேடு அடுத்த அரும்பாக்கத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை காரில் திருச்சிக்கு திரும்பினார்கள்.

காரை டிரைவர் சக்திவேல்(29) என்பவர் ஓட்டினார். போரூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சக்திவேல், காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது காரில் இருந்து அதிக அளவில் புகை வரத்தொடங்கியது. உடனே காரில் இருந்த 2 பெண்களும் கீழே இறங்கி விட்டனர். அதற்குள் காரில் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து கார் முழுவதும் தீ பரவியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் புகை வந்த உடன் 3 பேரும் கீழே இறங்கிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா? என விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com