குடகில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை

குடகில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
குடகில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை
Published on

பெங்களூரு,

குடகில் கொட்டி தீர்த்த கனமழைக்கு, அந்த மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று முன்தினம் மீட்பு பணிகளை பார்வையிட்ட மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும், குடகு மாவட்ட பொறுப்பு மந்திரியான சா.ரா.மகேசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.

இதுபற்றி பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லி கொடுக்க வேண்டுமா?. மத்திய ராணுவ மந்திரி என்பதால், அவரே குடகில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பா.ஜனதாவை சேர்ந்த 18 எம்.பி.க்களையும் குடகுக்கு அழைத்து சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தேவையற்றது. குடகு மாவட்டத்தை மறுசீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மழையால் ரூ.3 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த விதமான நிதி உதவியும் வரவில்லை. மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தை மட்டுமே மத்திய அரசு அனுப்பியது. பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளார். அதுபோல, குடகில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com