

திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் கீழடியில் மட்டும் 8 குழிகள் தோண்ட திட்டமிட்டு, தற்சமயம் 2 குழிகள் தோண்டப்பட்டு பணி நடக்கிறது.
இந்த குழிகளில் ஏற்கனவே பாசிமணிகள் அதிகமாக கிடைத்தன. பகடைக்காய், சில்லு வட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு குழியில் 5 அடி ஆழத்திற்கு மேல் தோண்டியபோது சேதமுற்ற நிலையில் பெரிய பானை போன்ற அமைப்பு தென்பட்டது. பானையின் மேல் பகுதி முழுவதும் சேதமடைந்து அடிப்பகுதி மட்டும் தெரிய வந்துள்ளது.
மற்றொரு குழியில் பழங்கால மக்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய அகலமான மற்றும் கனமான செங்கல், பழங்கால ஓடுகள் போன்றவை தென்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடைபெறுவதால் இன்னும் அதிகமான பொருட்கள் கிடைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.