ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா

திருப்பூர் காமராஜர் ரோடு பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அந்த வகையில் திருப்பூர் காமராஜ் ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சி அருகே சிவம் சிட்பண்ட் என்ற பெயரில் சேகர் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மேலும் ஏராளமானோர் ஏலச்சீட்டில் இணைந்து பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் ஏலச்சீட்டில் பணம் முழுவதையும் கட்டி முடித்த பின்னரும், அந்த பணத்தை இதுவரை எங்களுக்கு கொடுக்கவில்லை. இதனால் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனை கருத்தில் கொண்டு நாங்கள் கட்டிய பணத்தை எங்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் எங்கள் பகுதியில் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கான தவணை காலம் முடிந்து அதற்கான தவணை தொகைகளையும் முழுமையாக செலுத்தி கடந்த 1995-ம் ஆண்டு முதல் எங்கள் வீடுகளுக்கான பத்திரங்களை பெற்றுள்ளோம்.

ஆனால் வீடுகளுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் வீடுகளை விற்கவோ, வாங்கவோ, வங்கி கடன் பெறவோ எங்களுக்கு இயலாத நிலை உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உடனடியாக எங்கள் குடியிருப்புகளுக்கு பட்டா பெற்றுத்தர வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு இதுவரை குடிநீர், மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த மனுமீது தகுந்த நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com