

வேலூர்
கொரோனாவுக்கு சிகிச்சை
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 670 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்கம்பாறை, குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2-வது அலையில் தொற்று பாதிப்பால் மூச்சுதிணறல் ஏற்பட்டு தினமும் ஏராளமான நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சோக சம்பவங்கள் நடந்து வருகிறது.
14 பேர் பலி
வேலூர் மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு, தனியார் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் நேற்று முன்தினம் இறந்து போனார்கள்.
இந்த நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதேபோன்று வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 4 கொரோனா நோயாளிகள் இறந்து போனார்கள்.
இதுகுறித்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 14 பேரின் உடல்களும் முழுபாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.