நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக எடியூரப்பாவை நியமிக்க முடிவு

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜனதா கட்சி இலக்கு நிர்ணயித்திருப்பதுடன், தேர்தல் பொறுப்பாளராக எடியூரப்பாவை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக எடியூரப்பாவை நியமிக்க முடிவு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலையும் அந்த கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதற்கான பேச்சு வார்த்தையில் 2 கட்சிகளின் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக இப்போது இருந்தே தேர்தல் பணிகளை தொடங்கும்படி கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வரும் எடியூரப்பாவை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 20 தொகுதிகளில் கட்சியை கண்டிப்பாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் எடியூரப்பாவுக்கு வழங்க அமித்ஷா தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடத்திடம் இருந்து தகவல்கள் வந்திருப்பதாகவும், அதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பா.ஜனதாவை பலப்படுத்தவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் தீர்மானித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com