தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடிதுப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசை கண்டித்து பெரம்பலூர்-அரியலூரில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

பெரம்பலூர்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் மூலம் துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில், நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், பொதுமக்கள் மீது போலீசார் மூலம் துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கணபதி, பொருளாளர் கண்ணுசாமி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் தவசி அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.

இதேபோல் அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com