என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன் தினம் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ராமேசுவரம் மல்லிகை நகரைச் சேர்ந்த ஆரோக்கியம்மாள் என்பவருக்குச் சொந்தமான படகில் என்ஜின் பழுதானது. இதனால் அந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது காற்றின் வேகம் காரணமாக அந்த படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக குட்டி கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். ராமேசுவரம் மீனவர்களின் படகு ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் அவர்கள் அந்த படகை நோக்கி சென்றனர்.

பின்னர் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி அந்தப் படகையும், அதில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் ஜோசப் பால்ராஜ் (வயது 37), பெனிட்டோ (40), நாகராஜ் (45), இன்னாசி (22), சுப்பிரமணி (35), முனியசாமி (48), சத்தியசீலன் (25) ஆகிய 7 பேரையும் சிறைபிடித்து சென்றனர்.

பின்னர் அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com