

குறிப்பிட்ட அந்த சமுதாயத்தை சேர்ந்த ஷைலா என்ற பெண் படித்துவிட்டு, வெளிமாநிலத்தில் வேலைபார்த்த போது அங்குள்ள இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால் அவரது பெற்றோர், உடன்பிறந்தோர்களை ஊரைவிட்டே விலக்கி வைத்து விட்டார்கள். தங்கள் சமுதாயத்திற்கும் இவர் களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அறிவித்து விட்டார்கள். ஊர்விலக்கப்பட்டவர்கள் பெயர்கள்: அழகர்சாமி, அவரது மனைவி கன்னியம்மா மற்றும் பிள்ளைகள் சதீஷ், ஷைலா, லலிதா, சுசீலா ஆகியோர்.
கேரளாவில் இடுக்கி பகுதியில் சுசனிக்குடி என்ற பகுதி உள்ளது. சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அங்கு முதுவான்மார் என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கிராமமாக இருந்த இந்த பகுதியில் இப்போது மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அங்கிருந்து வெளியேறியவர்கள் தீர்த்தமலைகுடி என்ற இடத்தில் குடியேறினார்கன். அங்குள்ள மக்கள் மலையாளமும், தமிழும் கலந்த முதுவான்மார் மொழியில் பேசுகிறார்கள். அங்கிருந்துதான் அழகர்சாமி குடும்பம் நான்கு வருடங்களுக்கு முன்பு ஊர்விலக்கு செய்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.
நான் இடமலக்குடி என்ற ஊரை சேர்ந்தவன். எங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின்பு என் மனைவியின் ஊரான சுசனிக்குடிக்கு சென்றோம். நான் ஆறாம் வகுப்பு வரையே படித்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்கவேண்டும் என்று விரும்பினோம். மூத்த மகள் ஷைலா ஆயுர்வேதத்தில் நர்சிங் படித்து வேலைக்கு சேர்ந்தாள். லலிதா பி.எஸ்சி.யும், சுசீலா பி.ஏ.யும் படித்தார்கள். இது எங்கள் சமுதாயத்தை பொறுத்தவரையில் பெரிய விஷயமாகும். எங்கள் முதுவான் சமூகத்தில் யாரும் வெளியே இருந்து திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த விதியை வகுத்துவைத்திருக்கிறார்கள் என்கிறார், அழகர்சாமி.
அவரது மகள் சுசீலா சொல்கிறார்:
எனது அக்காள் ஷைலா படித்து முடித்ததும் பீகாரில் நர்ஸ் வேலை கிடைத்தது. அந்த மாநிலத்தை சேர்ந்த ராம்பிரவேஷ் என்பவர், அக்காளை காதலித்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பியதை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் சொன்னோம். முதலில் அமைதியாக கேட்டவர்கள் பின்பு ஒன்று சேர்ந்து எதிர்த்தார்கள். அடுத்து எங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவரை அவசரமாக தயார்செய்து அவரை என் அக்காளுக்கு திருமணம் செய்துவைக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். அந்த நபர் பள்ளிக்கூடத்திற்குகூட செல்லாதவர். அவரை திருமணம் செய்தால் அதோடு அக்காளின் வாழ்க்கை முடிந்து போகும் என்பதால் நாங்கள் சம்மதிக்கவில்லை என்கிறார்.
ஒரு குடும்பத்தை அவர்கள் ஊர்விலக்கு செய்துவிட்டால், பின்பு அவர்களுக்கும் முதுவான் சமூகத்தினருக்கும் எந்த தொடர்பும் இருக்காது. வசிக்கும் வீட்டைவிட்டும் வெளியேறிவிடவேண்டும். அந்த சமூகத்தோடு இணைந்து வாழும் குடும்பத்தினர் வீடுகளுக்கோ, உறவினர்கள் வீடுகளுக்கோ செல்ல முடியாது. அவர்களிடம் பேசவும் கூடாது. குடும்பத்தில் யாராவது இறந்துபோனாலும் அவரை பார்க்கவும் அனுமதிகிடையாது. ஊர்விலக்கப்பட்ட குடும்பத்தினரோடு, அந்த சமூகத்தினர் யாராவது தொடர்பு வைத்திருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
அதனால் கடுமையான நெருக்கடிக்குள் அழகர்சாமி சிக்கினார். ஒன்று அவர் தனது மகளின் வாழ்க்கைக்கு எதிரான முடிவை எடுக்கவேண்டும் அல்லது ஊர்விலக்கலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குள் அவர் தள்ளப்பட்டார்.
காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பிய என் மகளை நான் குடும்பத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டேன் என்று சொன்னால் மட்டும் போதாது. அவளோடு அதன் பின்பு எக் காலத்திலும் நான் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று ஊர்க்கூட்டத்தில் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். அவளை பார்க்கக்கூடாது. பேசக்கூடாது. அவளுக்கு பிறக்கும் குழந்தைகளையும் சென்று பார்க்கக்கூடாது. நாங்கள் செத்துப்போனாலும் எங்களை அவள் வந்து பார்க்கக்கூடாது. அதை மீறி நாங்கள் எதுவும் செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். என் மகள் எந்த தப்பும் செய்யவில்லை. அவள் விரும்பியவரோடு வாழ அவளுக்கு இருக்கும் உரிமையை யார் தடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார், அழகர்சாமி. ஊர்விலக்கப்பட்ட பின்பு வேறு பகுதி ஒன்றில், வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
முதுவான் சமூகத்தினர் வசிக்கும் கிராமங்களை குடி என்று அழைப்பார்கள். ஒவ்வொரு குடிக்கும் ஒரு தலைவர் இருப்பார். அவரை காணி என்றும் அழைப்பார்கள். எனது தந்தை நடராஜன் சுசனிக்குடி காணி. ஆனாலும் அவரால் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாது. காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களை நிறைவேற்றுவதுதான் அவரது வேலை.
காடுகளை நம்பித்தான் எங்கள் சமூக மக்கள் வாழ்வார்கள். காடுகளை திருத்தி விவசாயம் செய்வார்கள். நாங்கள் எங்கள் விவசாய பூமியையும், சொந்த வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறி வாடகை வீட்டில் வசிக்கிறோம். கூலி வேலைபார்த்துதான் வாழ்க்கையை ஓட்டுகிறோம். ஊர் விலக்கப்பட்ட பின்பு என் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் எங்கள் சமூகத்தை சேர்ந்த யாரும் வந்து பார்க்கவில்லை. எங்கள் சொந்த வீடும் அங்கு உருக்குலைந்துபோய் கிடக்கிறது என்கிறார், கன்னியம்மா.
இவர்கள் விரும்பினால் ஊர்விலக்குதலில் இருந்து மீள முடியுமாம். ஆனால் அதற்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றவேண்டுமாம்.