மயிலம் அருகே விவசாயியை வெட்டிவிட்டு தப்பி ஓடிய தொழிலாளி

மயிலம் அருகே விவசாயியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய தொழிலாளி, தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு.
மயிலம் அருகே விவசாயியை வெட்டிவிட்டு தப்பி ஓடிய தொழிலாளி
Published on

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கீழ்பேரடிக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 54). தொழிலாளி. இவருடைய மகளை, அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதற்கு செல்வராஜ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த பிரச்சினையை அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பராயன்(70) பஞ்சாயத்து பேசி முடித்து வைத்தார். இது தொடர்பாக செல்வராஜிக்கும், சுப்பராயனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பராயன், தனது வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கத்தியுடன் செல்வராஜ் வந்தார். அவர் திடீரென கத்தியால் சுப்பராயனின் கழுத்துப்பகுதியில் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த அவர் அலறினார்.

உடனே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரது கும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த சுப்பராயனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் நேற்று காலையில் செல்வராஜ், அதே ஊரில் உள்ள அவரது அண்ணன் ஏழுமலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் விரைந்து வந்து, செல்வராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செல்வராஜியின் மற்றொரு அண்ணன் ராஜாராம்(64), மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது.

20-ந் தேதி நள்ளிரவில் சுப்பராயன் மனைவி முனியம்மாள் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், எனது கணவரை, செல்வராஜ் கத்தியால் வெட்டி விட்டதாகவும், இது பற்றி அறிந்ததும் அருவாபாக்கத்தில் இருந்து எனது உறவினர்கள் 20 பேர் ஒரு வேனில் வருவதாகவும், எனவே நீங்கள் அனைவரும் வெளியூருக்கு சென்று விடுங்கள் என்று கூறினார். உடனே நாங்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டோம். ஆனால் எனது தம்பி செல்வராஜ் மட்டும் எங்களுடன் வரவில்லை. இதற்கிடையில் செல்வராஜ், தூக்கில் பிணமாக தொங்குவதாக எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் செல்போன் மூலம் தகவல் கூறினார். செல்வராஜ் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுப்பராயன் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர், நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது செல்வராஜ், திடீரென கத்தியால் என்னை வெட்டிவிட்டார். எதற்காக வெட்டினார் என்பது பற்றி தெரியவில்லை என்று கூறினார்.

இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com