கலங்கலான குடிநீரை காட்டி அதிகாரியிடம் விவசாயிகள் முறையீடு பூதலூரில் நடந்த ஜமாபந்தியில் பரபரப்பு

பூதலூரில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அதிகாரியிடம் விவசாயிகள் கலங்கலான குடிநீரை காட்டி முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலங்கலான குடிநீரை காட்டி அதிகாரியிடம் விவசாயிகள் முறையீடு பூதலூரில் நடந்த ஜமாபந்தியில் பரபரப்பு
Published on

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாசில்தார் அலுவலகத்தில் கிராம வருவாய் கணக்குகளை ஆய்வு செய்யும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் கலந்து கொண்டு கிராம கணக்குகளை ஆய்வு செய்தார். இதையடுத்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியுடன், பூதலூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது மாவட்ட வருவாய் அதிகாரியிடம், பூதலூர் ஒன்றியம் அலமேலுபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் திடீரென கலங்கலான குடிநீரை ஒரு பாட்டிலில் எடுத்து காட்டி முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

நாகாச்சி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீர் கலங்கலாக உள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த பின்னரும் குடிநீர் கலங்கலாகவே உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பூதலூர் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com