மோட்டார்சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி தந்தை-மகன் பலி

வாலாஜா அருகே மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகன் பலியாயினர்.
மோட்டார்சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி தந்தை-மகன் பலி
Published on

வாலாஜா,

ராணிப்பேட்டையை அடுத்த வாணாபாடி மந்தைவெளி தெருவில் வசித்தவர் முனிசாமி (வயது 50), இவரது மகன் கலையரசன் (30) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் இவர்கள் 2 பேரும் வாணாபாடியில் இருந்து வாலாஜா நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை கலையரசன் ஓட்டினார். அவரது தந்தை முனிசாமி பின்னால் அமர்ந்து வந்தார்.

வாலாஜா அருகே வி.சி.மோட்டூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட முனிசாமி அந்த இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த கலையரசனை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவலறிந்த வாலாஜா போலீசார் முனிசாமி, கலையரசன் ஆகியோரது உடல்களை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com