சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பெண்யானை மயங்கி விழுந்து சாவு

சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பெண்யானை மயங்கி விழுந்து இறந்தது. அதன் அருகில் நின்றவாறு குட்டியுடன் வந்த ஆண்யானை பாசப்போராட்டம் நடத்தியது.
சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பெண்யானை மயங்கி விழுந்து சாவு
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை மற்றும் சுற்றி உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் சுமார் 25 வயதில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல் நலக்குறைவால் அங்கும் இங்கும் தள்ளாடியபடி அலைந்து கொண்டிருப்பதாக சிறுமுகை வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து கோவை மாவட்டவன அலுவலர் சதீஷ் உத்தரவின் பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன், வனவர் ரவி வனக்காப்பாளர் சதீஷ்குமார் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது சற்று தூரத்தில் தள்ளாடியபடி அந்த யானை வந்து கொண்டிருந்தது. திடீரென மயக்கம்போட்டு கீழே விழுந்தது. பின்னர் அது சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. இதனை பார்த்து அந்த இடத்துக்கு குட்டியுடன் ஒருஆண்யானை வந்தது. அங்கு வந்த ஆண்யானை, இறந்துகிடந்த பெண்யானையை சுற்றி, சுற்றி வந்து பிளிறியது. பிணமாக கிடக்கும் அந்த பெண்யானையின் உடலை, தனது துதிக்கையால் தொட்டு, எழுப்ப முயன்றது. நீண்டநேரம் இந்த பாசப்போராட்டம் நடந்தது. அப்போது அந்த ஆண்யானையின் கண்களில் இருந்து நீர் தாரை, தாரையாக வடிந்தது. இந்த காட்சியை பார்த்த வனத்துறையினர் நெஞ்சமும் கலங்கியது.

ஆண்யானை அங்கு நின்று கொண்டிருந்ததால் இறந்து கிடந்த அந்த பெண் யானையின் அருகே வனத்துறையினர் நெருங்க முடியவில்லை. இதனை தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து குட்டியுடன் வந்த அந்த யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. இதனை தொடர்ந்து சிறுமுகை அரசு கால்நடை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் தியாகராஜன் முன்னிலையில் இறந்த யானையின் உடல் உடற் கூறு பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட அதன் உடற்கூறுகள் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆய்வக அறிக்கை கிடைத்ததும்தான் யானை இறந்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டு, அதில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com