

திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு காசிபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் உதயசங்கர். இவருடைய மகள் மோனிகா(வயது 26). என்ஜினீயரான இவர், கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி முதல் மாயமானார். இதுபற்றி காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மோனிகா, ஏற்கனவே திருமணமான புளியந்தோப்பை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டு பெரியபாளையத்தில் வசிப்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் இருவரும் சேர்ந்து ஆன் லைன் வர்த்தகம் மூலம் பலரிடம் ரூ.15 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும், அதேபோல் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதும் தெரிந்தது.
மேலும் இதுதொடர்பாக மோனிகா, ராஜேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் இருப்பதால் அவர்களை போலீசார் தேடுவதும் தெரிந்தது. இதையடுத்து மோனிகா, ராஜேஷ் இருவரையும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இயங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் காசிமேடு போலீசார் ஒப்படைத்தனர்.