தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பல் அதிர்ச்சியில் தொழிலாளி மயங்கி விழுந்தார்

வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 கூரைவீடுகள் சாம்பலானது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. வீடு எரிந்ததை பார்த்து அதிர்ச்சியில் தொழிலாளி மயங்கி விழுந்தார்.
தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பல் அதிர்ச்சியில் தொழிலாளி மயங்கி விழுந்தார்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் கந்தசாமி, மாரியப்பன். விவசாய தொழிலாளிகள். இவர்களின் கூரை வீடுகள் அருகருகே உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் மாரியப்பன் வீட்டில் சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக அவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள கந்தசாமியின் வீட்டிற்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது.

தனது வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அதிர்ச்சியில் கந்தசாமி மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இதன் சேதமதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com