

தானே,
தானே மாவட்டம், பிவண்டி பட்வாவ் கிராம குடிசைப்பகுதியில் வசித்து வருபவர் ரதிகாந்த். இவரது மனைவி சுஸ்மிதா(வயது28). இவர்களுக்கு 2 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருந்தாள். சம்பவத்தன்று சுஸ்மிதாவும், சிறுமி சுபஸ்ரீயும் உடலில் தீப்பிடித்து படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சமையல் செய்தபோது, ஸ்டவ் வெடித்து தீப்பிடித்ததாக கூறப்பட்டது. ஆனால் சம்பவத்தன்று கணவர், மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கணவரை பயமுறுத்த சுஸ்மிதா உடலில் மண்எண்ணையை ஊற்றி இருக்கிறார்.
பின்னர் அவர் தீக்குச்சியை பற்ற வைத்தபோது, அவரது உடலில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்துள்ளது. மேலும் இந்த தீ அருகில் நின்று கொண்டு இருந்த குழந்தை மீதும் பிடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரதிகாந்த் மனைவி, மகளை காப்பாற்ற முயன்றார். இதில், அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.