நாமக்கல்லில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார்

நாமக்கல்லில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார்.
நாமக்கல்லில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார்
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.338 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிட உள்ளார்.

முன்னதாக காலை 9.45 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வருகை தரும் முதல்-அமைச்சர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

9.47 மணிக்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், தொடர்ந்து முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். காலை 10 மணி அளவில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

கோழிப்பண்ணை உரிமையாளர்கள்

காலை 11.10 மணிக்கு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் முட்டை விற்பனை செய்யும் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடைபெறுகிறது. 11.25 மணிக்கு லாரி உரிமையாளர்கள், சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ரிக் வண்டி உரிமையாளர்களுடன் கலந்தாய்வு நடக்கிறது.

பின்னர் 11.40 மணிக்கு நூற்பாலை உரிமையாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்துகிறார். 11.55 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகளுடனும், 12.10 மணிக்கு மகளிர் சுயஉதவிக்குழுவினருடனும் கலந்தாய்வு செய்கிறார். பிற்பகல் 1 மணிக்கு எர்ணாபுரத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com