

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பெனாய்ராஜ் (வயது 45). மீனவரான இவர், சுரேஷ் என்பவரது விசைப்படகில் சக மீனவர்கள் 5 பேருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றார். பின்னர் மீன் பிடித்துவிட்டு மாலை 6 மணிக்கு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த பெனாய்ராஜ், திடீரென நிலைதடுமாறி கடலில் விழுந்து விட்டார்.
உடனடியாக சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை தேடினர். ஆனால் பெனாய்ராஜ் கிடைக்கவில்லை. இதையடுத்து கரைதிரும்பிய மீனவர்கள், மீண்டும் நேற்று காலை வேறு படகில் சென்று கடலில் விழுந்து மாயமான மீனவரை தேடினர். மாயமான மீனவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்த போலீசார், கடலில் விழுந்து மாயமான மீனவர் பெனாய்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.