பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 10 நாளாக நடத்திய வாகன சோதனையில் ரூ.43 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படையினர் கடந்த 10 நாட்களாக நடத்திய வாகன சோதனையில் ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 10 நாளாக நடத்திய வாகன சோதனையில் ரூ.43 லட்சம் பறிமுதல்
Published on

திருவண்ணாமலை,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 10 நாளாக நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.26 லட்சத்து 31 ஆயிரத்து 202 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் நிலை கண்காணிப்பு குழுவினரும் வாகன சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 16 லட்சத்து 90 ஆயிரத்து 430-ஐ பறிமுதல் செய்துள்ளனர். இதன்படி மொத்தம் ரூ.43 லட்சத்து 21 ஆயிரத்து 632 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிய விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 550 விடுவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.38 லட்சத்து 59 ஆயிரத்து 82 அதிகாரிகளின் விசாரணையில் உள்ளது. இந்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com