தொண்டியில் இறந்து அழுகிய நிலையில் கடலில் மிதந்த ராட்சத திமிங்கலம்

தொண்டி மகாசக்திபுரம் கடல் பகுதியில் இறந்து அழுகிய நிலையில் ராட்சத திமிங்கலம் மிதந்தது.
தொண்டியில் இறந்து அழுகிய நிலையில் கடலில் மிதந்த ராட்சத திமிங்கலம்
Published on

தொண்டி,

தொண்டி மகாசக்திபுரம் கடல் பகுதியில் இறந்து அழுகிய நிலையில் சுமார் 34 அடி நீளமும் 9 டன் எடையும் கொண்ட ராட்சத திமிங்கலம் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் உத்தரவின்பேரில் வன உயிரின காப்பக வனச் சரகர் சதீஸ், வனவர் சுதாகர், கடல்வள ஆராய்ச்சியாளர்கள் பிரேம் ஜோதி, ருக்மணி சேகர், மது மற்றும் வனத்துறை அலுவலர்கள், மீனவர்களின் உதவியுடன் விசைப்படகில் கடலுக்குள் சென்று திமிங்கலத்தின் வாலில் கயிறு கட்டி புதுக்குடி அருகே உள்ள முசிறிலான்தோப்பு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு கால்நடை மருத்துவர் நிஜாம் உடற்கூறு பரிசோதனை செய்தார். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ராட்சத குழி தோண்டி அதை புதைத்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் சதீஸ் கூறியதாவது:- இதுபோன்ற திமிங்கலங்கள் ஆபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக கரை பகுதியை நோக்கி வருகின்றன. அப்போது ஆழம் இல்லாத நிலையில் நீந்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் இறந்து விடுகின்றன. மேலும் கடலில் ஏற்படும் நில அதிர்வு, பூகம்பம் போன்ற காரணங்களாலும், படகுகளின் இரைச்சல், எண்ணெய் கசிவுகளை விழுங்குதல் போன்றவற்றின் காரணமாகவும் அவை இறக்க நேரிடலாம். படகுகள் மோதுவதாலும் இறக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com