வினாத்தாள் வெளியான சம்பவம்: ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாறு வினாத்தாள் வெளியானது தொடர்பாக இரு ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வினாத்தாள் வெளியான சம்பவம்: ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது
Published on

மும்பை,

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வு தொடங்குவதற்கு முன் கல்யாண் அருகில் உள்ள ஒரு தேர்வு மையத்துக்கு தேர்வு எழுத வந்திருந்த மாணவர்களின் வாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியானது.

இதுதொடர்பாக 15 மாணவர்கள் பிடிபட்டனர். அதே நேரத்தில் மும்பை அந்தேரியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையத்துக்கு வந்திருந்த மாணவர்களின் செல்போனிலும் அந்த வினாத்தாள் இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி அந்த பள்ளி நிர்வாகம் சார்பில் அம்போலி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

வாட்ஸ்அப்பில் வினாத்தாளை வைத்திருந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு முடிந்ததும் அவர்கள் அம்போலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வினாத்தாள் வெளியானதில் பயிற்சி மைய ஆசிரியர்களான தானே மாவட்டம் அம்பர்நாத் மேற்கு பகுதியை சேர்ந்த பிரோஷ் கான் (வயது49), பத்லாபூரை சேர்ந்த ரோகித் சிங் மற்றும் மும்பையை சேர்ந்த இம்ரான் சேக் (45), மும்ராவை சேர்ந்த அன்வருண் ஹசன் (21) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக 8 மாணவர்கள் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com