பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி

காஞ்சீபுரம் அருகே, பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ள குண்ணம் கீழண்டை தெருவில் வசிப்பவர் குமார். இவருடைய மகன் நவீன் (வயது 15). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் நவீன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

பின்னர் சாதத்துடன் சாம்பாரை ஊற்றி சாப்பிட்டார். ஆனால் சாம்பாரில் பல்லி விழுந்து இருந்தது. அதை கவனிக்காமல் நவீன், அந்த உணவை சாப்பிட்டு விட்டார்.

சிறிது நேரத்தில் நவீனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உடனடியாக நவீனை மீட்டு சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தண்டலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com