கோழிக்கழிவுகள் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது

களியக்காவிளை அருகே கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். பின்னர் போலீசார் மீண்டும் லாரியை கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.
கோழிக்கழிவுகள் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது
Published on

களியக்காவிளை,

கேரள பகுதிகளில் இருந்து மீன் மற்றும் கோழிக்கழிவுகளை லாரி, டெம்போக்களில் ஏற்றி வந்து குமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள கிராமங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கொட்டிவிட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனை தடுப்பதற்காக மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் கண்காணித்து, போலீசார் உதவியுடன் கோழிக்கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களை மீண்டும் கேரள பகுதிக்குள் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று களியக்காவிளை அருகே கேரள பதிவெண் கொண்ட ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே, மோட்டார்சைக்கிளில் விரட்டிச் சென்று படந்தாலுமூட்டில் வைத்து லாரியை மடக்கிப்பிடித்தனர்.

பின்னர், இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்தனர். அதில் கோழி மற்றும் மீன் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அந்த லாரியை குமரி மாவட்டத்தின் எல்லையை அடுத்த கேரள பகுதியான இஞ்சிவிளைக்கு திருப்பி அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com