மிலிட்டரி கேண்டீன் பூட்டப்பட்டதால் சேலத்தில் முன்னாள் ராணுவத்தினர் திடீர் தர்ணா

மிலிட்டரி கேண்டீன் பூட்டப்பட்டதால் சேலத்தில் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிலிட்டரி கேண்டீன் பூட்டப்பட்டதால் சேலத்தில் முன்னாள் ராணுவத்தினர் திடீர் தர்ணா
Published on

சேலம்,

மிலிட்டரி கேண்டீன் பூட்டப்பட்டதால் சேலத்தில் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இந்த கேண்டீனில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து அது மூடப்பட்டது. இதுதொடர்பாக சென்னையில் இருந்து சிறப்பு குழுவினர் வந்து விசாரணை நடத்தினர். இதில் முறைகேடு நடக்கவில்லை என்று அந்த குழுவினர் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 22-ந் தேதி கேண்டீன் மீண்டும் திறக்கப்பட்டது.

இதையடுத்து சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் தங்களுடைய வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் வாங்கி சென்றனர். இந்தநிலையில் பொருட்கள் வாங்குவதற்காக 200-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் நேற்று காலை கேண்டீனுக்கு வந்தனர்.

காலை 9 மணிக்கு கேண்டீன் திறந்தவுடன் வழக்கம்போல் பயோ மெட்ரிக் முறைப்படி 150 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்க டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது டோக்கனை பெறுவதற்காக முன்னாள் ராணுவத்தினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளுடன் முன்னாள் ராணுவத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒத்துகொள்ளாததால் அதிகாரிகள் கேண்டீனை இழுத்து பூட்டி சீல் வைத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவத்தினர் கேண்டீனை முற்றுகையிட்டதுடன் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கேண்டீனை திறந்து பொருட்களை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் அன்னதானப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் பிரபாகரன் கூறும் போது, மிலிட்டரி கேண்டீன் முறைகேடு புகாருக்கு பின் கடந்த 22-ந் தேதி திறக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 150 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்க முடியும். ஆனால் முன்னாள் ராணுவத்தினர் சிலர் இன்று(நேற்று) தகராறில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சென்னை தலைமை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிகாரி உத்தரவின் பேரில் மிலிட்டரி கேண்டீன் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த கேண்டீன் போலீஸ் பாதுகாப்புடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com