

ஈத்தாமொழி,
வேர்கிளம்பி அருகே உள்ள மணலிக்கரை ஆற்றூர் கோணத்தை சேர்ந்தவர் குமார்(வயது 45). இவர் மினி டெம்போ ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் லிபின்(24), ஜஸ்டின்(30). இவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்தனர். இருவரும், கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் இருந்து மீன்களை வாங்கி கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வழக்கம். இதற்காக குமாரின் மினி டெம்போவை பயன்படுத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை மீன்களை வாங்க லிபின், ஜஸ்டின், குமார் உள்பட 5 பேர் சின்னமுட்டம் வந்தனர். பின்னர், மீன்களை வாங்கிவிட்டு அவர்கள் கேரளாவிற்கு புறப்பட்டனர். மினி டெம்போவில் லிபினும், ஜஸ்டினும் பின்னால் அமர்ந்திருந்தனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் அவர்கள் ஈத்தமொழி அருகே மங்காவிளை பகுதியில் சென்றபோது திடீரென குமாரின் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ ரோட்டோரத்தில் இருந்த கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த லிபினும், ஜஸ்டினும் டெம்போவின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் லிபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஜஸ்டின் படுகாயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் டிரைவர் குமார் உள்பட 3 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மேலும் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், ஈத்தாமொழி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பலியான லிபின் உடலை மீட்டனர்.
பின்னர் லிபின் உடல், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.