மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தையுடன் கர்ப்பிணி பலி - நெய்வேலியில் பரிதாபம்

நெய்வேலியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3 வயது குழந்தையுடன் கர்ப்பிணி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தையுடன் கர்ப்பிணி பலி - நெய்வேலியில் பரிதாபம்
Published on

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து மேலூர் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி மகாலட்சுமி(வயது 23). இவர்களுடைய மகன் ரஜினிபிரபா என்கிற ஸ்ரீபிரசாத்(3). மகாலட்சுமி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நெய்வேலியில் வாரச்சந்தை நடந்தது. சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக பிரபாகரன் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு காய்கறிகள் வாங்கிவிட்டு, அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

நெய்வேலி ஆர்ச்கேட்-டவுன்ஷிப் சாலையில் பாரதிநகர் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென பழுதானது. உடனே பிரபாகரன், அந்த மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றார். அவருடன் மகாலட்சுமி, தனது குழந்தையுடன் நடந்து சென்றார். அப்போது ஆர்ச்கேட்டில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், பிரபாகரன் குடும்பத்தினர் மீது மோதியது. இதில் காயமடைந்த 3 பேரும் என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மகாலட்சுமி மற்றும் ஸ்ரீபிரசாத் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com