நகராட்சி பணியாளர் மர்ம சாவு பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை

பெரம்பலூர் அருகே மதுக்குடித்த நகராட்சி பணியாளர் மர்மமான முறையில் திடீரென இறந்தார். இது குறித்து பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி பணியாளர் மர்ம சாவு பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிழக்குதெருவை சேர்ந்தவர் ரத்தினக்குமார் (வயது 27). இவர், பெரம்பலூர் நகராட்சியில் குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனத்தின் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அனிதா (23). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பெரம்பலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் காண்பித்து விட்டு அனிதா, சின்னாறு பகுதியிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 2-ந்தேதி சின்னாறுக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு ரத்தினக்குமார் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மூச்சு பேச்சில்லாமல் ரத்தினகுமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைக்கண்ட அவரது தாய் மகேஸ்வரி கதறி அழுதார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து ரத்தினக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ரத்தினக்குமார் மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டது.

எனவே அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது மனைவியை பார்க்க சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு அதில் தாக்கப்பட்டு இறந்தாரா? அல்லது மனஉளைச்சலில் விஷம் குடித்து இறந்தாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே ரத்தினக்குமாரின் சாவில் மர்மம் இருக்கிறது எனவும், மாமியார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் ரத்தினக்குமாரின் தாய் மகேஸ்வரி உள்பட உறவினர்கள் பெரம்பலூர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

ஆனால் ரத்தினக்குமார் அளவுக்கு அதிகமாக மது அருந்தியவாறு தான் சின்னாறு வந்தார். பின்னர் நிலைதடுமாறி கீழே விழுந்து சென்றதால் அவர் இறந்திருக்கலாம் என அனிதாவின் உறவினர்கள் போலீசில் தெரிவித்தனர். நேற்று ரத்தினக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே அனிதா உறவினர்களுக்கும், ரத்தினக்குமார் உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பெரம்பலூர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com