கொலை செய்யும் திட்டத்துடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது; வெடிகுண்டு பறிமுதல்

கொலை செய்யும் திட்டத்துடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கொலை செய்யும் திட்டத்துடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது; வெடிகுண்டு பறிமுதல்
Published on

புதுச்சேரி,

புதுவையில் சமீப காலமாக பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி படுகொலைகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் மத்தியில் இந்த கொலைகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து ரவுடிகளை ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசவே சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை சோதனையிட்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் நாட்டு வெடிகுண்டு ஒன்றை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை கைது செய்து வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள் என்ற பழனி (வயது 21), துத்திப்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பிரதாப்ராஜ் (19) என்பது தெரியவந்தது.

யாரையோ கொலை செய்யும் திட்டத்தில் வெடிகுண்டுடன் அவர்கள் சுற்றி திரிவது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மீண்டும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com